கந்தர் அநுபூதி பாடல்கள்


வேலும் மயிலும் துணை

கந்தர் அநுபூதி


(முருகப் பெருமான்)






அருளாளர் அருணகிரிநாதர்

(திருச்செங்கோடு)






கந்தர் அநுபூதி


காப்பு


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்தருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கரவானை பதம் பணிவாம்.    

      

நூல்


ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே.     
  1

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாமற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.       2


வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண்ட இடம்
தானோ பொருளாவது ஷண்முகனே.      3

வளைபட்டகைம் மாதொடு மக்களெனும்
தளைபட்டழியத் தகுமோ தகுமோ
கிளைபட்டெழு சூருரமும் கிரியும்
தொளைபட்டுருவத் தொடு வேலவனே.  4

மகமாயை களைந்திட வல்லபிரான்
முகமாறு மொழிந்தும் ஒழிந்திலனே
அகமாடை மடந்தையர் என்றயரும்
ஜகமாயையுள் நின்று தயங்குவதே.       5

திணியான மனோசிலை மீது உனதாள்
அணியார் அரவிந்தம் அரும்புமதோ
பணியாஎன வள்ளிபதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே.        6

கெடுவாய் மனனே கதிகேள் கரவாது
இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினையாவையுமே.      7

அமரும்பதி கேள் அகமாம் எனுமிப்
பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம்பொரு தானவ நாசகனே.         8

மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப்
பட்டூசல்படும் பரிசென்று ஒழிவேன்
தட்டூடறவேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.         9

கார்மாமிசை காலன்வரில் கலபத்து
ஏர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரிதலாரி எனும்
சூர்மாமடியத் தொடு வேலவனே.        10

கூகாஎன என்கிளை கூடி அழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவி
த்யாகா சுரலோக சிகாமணியே.        11

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மாஇரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே.     12

முருகன் தனிவேல்முனி நம்குருவென்று
அருள்கொண்டு அறியார் அறியுந் தரமோ
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே.  13

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய்விழி நாசியொடும் செவியாம்
ஐவாய்வழி செல்லும் அவாவினையே.   14

முருகன் குமரன் குகன்என்று மொழிந்து
உருகும் செயல்தந்து உணர்வென்று அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே.       15

பேராசைஎனும் பிணியில் பிணிபட்டு
ஓராவினையேன் உழலத் தகுமோ
வீரா முதுசூர்பட வேல் எறியும்
சூரா சுரலோக துரந்தரனே.         16

யாமோதிய கல்வியும் எம்மறிவும்
தாமேபெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே.        17

உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதிகாவல சூர பயங்கரனே.         18

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோகியவா
அடியந்தமிலா அயில்வேல் அரசே
மிடியென்று ஒருபாவி வெளிப்படினே.   19

அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்ரம வேளிமையோர்
புரிதாரக நாக புரந்தரனே.          20

கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசந்தர என்றிசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூர விபாடணனே.         21

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக்குழல் வள்ளிபதம் பணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே.        22

அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக்ரம வேல் மகிபா குறமின்
கொடியைப் புணரும் குணபூதரனே.       23

கூர்வேல்விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள்சேரவும் எண்ணுமதோ
சூர்வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர்வேல புரந்தர பூபதியே.         24

மெய்யேஎன வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே.       25

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒருசற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத மனோ
தீதா சுரலோக சகாமணியே.         26

மின்னேநிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கிதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே.        27

ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலைநின்றது தற்பரமே.       28

இல்லேஎனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.     29

செவ்வான் உருவில் திகழ்வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்த ()துதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.     30

பாழ்வாழ்வு எனுமிப் படுமாயையிலே
வீழ்வாய்என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தனதாம் உளவோ
வாழ்வாய் இனிநீ மயில்வாகனனே.      31

கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ
கொலையேபுரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலைகூறிடு வாகையனே.      32

சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தாடவி என்று விடப்பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே.         33

சிங்கார மடந்தையர் தீநெறிபோய்
மங்காமல் எனக்கு வரம்தருவாய்
சங்க்ராம சிகாவல ஷண்முகனே
கங்காநதி பால க்ருபாகரனே.         34

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்
மதிவாணுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா சுரபூபதியே.         35

நாதா குமரா நமவென்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்
வேதாமுதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பதசேகரனே.         36

கிரிவாய்விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.     37

ஆதாளியை ஒன்றறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கிறைவா
வேதாள கணம்புகழ் வேலவனே.       38

மாவேழ் சனனம்கெட மாயைவிடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின்கொடி தோள்புணரும்
தேவே சிவசங்கர தேசிகனே.         39

வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசும்
தினையோடு இதணோடு திரிந்தவனே. 40

சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகம் செயுநாள்
வாகா முருகா மயில் வாகனனே
யோகா சிவஞான உபதேசிகனே.       41

குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை சிந்தையுமற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே. 42

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.         43

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர்மாமுடி வேதமும் வெம்
காடும் புனமும் கமழும் கழலே.       44

கரவாகிய கல்வியுளார் கடைசென்று
இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே.        45

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறைநாயகனே.       46

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
சீறாவருசூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.       47

அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ
செறிவொன்று அறவந்து இருளே சிதைய
வெறிவென்றவரோடு உறும் வேலவனே.     48

தன்னந்தனி நின்றது தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னம் களையும் க்ருபைசூழ் சுடரே.     49

மதிகெட்டு அறவாடி மயங்கி அறக்
கதிகெட்டு அவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகாதிப அத்
திதிபுத்திரர் வீறடு சேவகனே.        50


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. 51




ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம்
ஓம்